268 நாட்களாக போராடிவரும் கரும்பு விவசாயிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 268 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சை வழியாக மயிலாடுதுறை செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலியமங்கலத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், ”திருஆருரான் சக்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடியும், அதேபோல் விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 300 கோடி கடன் பெற்றுள்ளது. அந்த கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஆலை நிர்வாகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 268 நாட்களாக போராடி வருகிறோம்.
இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக போராடி வரும் விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். எனவே, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.