தஞ்சை அருகே அளவுக்கு அதிகமாக மண் வெட்டி எடுத்து விற்பனை செய்த ஏலதாரருக்கும், அதை தடுக்க வந்த கிராம மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சங்கரநாதர் குடிக்காடு கிராமத்தில் உள்ள ஏரியில் மண் வெட்டி எடுத்து கொள்ள நாகராஜ் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.
அவர் 26.05.2023 முதல் 3 நாட்கள் மட்டுமே மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளார். ஆனால், 20.06.2023 வரை 26 நாட்கள் இடை நில்லாமல் ஏரியில் மண் வெட்டி விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஏரியின் ஆழம் அதிகமானதுடன், இயற்கை வளம் சுரண்டப்படுவதாக கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இதனையடுத்து. கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, ஏரியில் மண் அள்ளிக்கொண்டு இருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை மண் அள்ள விடாமல் தடுத்து சிறை பிடித்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட ஏலதாரர் நாகராஜ், சம்பவ இடத்திற்கு தனது ஆட்களுடன் வந்து கிராம மக்களிடம் தகராறில் ஈடுப்பட்டார்.
இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கற்களால் தாக்கி கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.