தமிழ்நாடு
”உதயநிதிக்கு எதிரான அயோத்தி சாமியார் பேச்சு வன்முறையல்ல...” - செல்லூர் ராஜூ கருத்து
அயோத்தி சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியின் போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாகவும், அயோத்தி சாமியாரின் சர்ச்சை பேச்சு தொடர்பாகவும் கேட்டதற்கு,
"சனாதனம் குறித்த கருத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதிமுக அனைத்து மதத்தினரையும் சமமாக கருதக்கூடிய இயக்கம். அனைத்து மதத்தினரும் மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. இக்கட்சியில் சாதிமத வேறுபாடுகள் கிடையாது.
சாதுக்களே இந்த அளவிற்கு மனம் வெதும்பி போய் பேசி இருக்கிறார்கள். அதை வன்முறையாக நான் கருதவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து" என கூறினார்.