சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லட்டாரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த மாநிலங்களில் மார்ட்டின் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் கிடைத்த வருவாயை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ட்டினுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இவர் கடந்த 2009-2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி ரூ.910 கோடி வரை வருவாய் ஈட்டியதாகவும், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் வருமான வரித்துறை குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக கொச்சின் அமலாக்கத்துறை மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் கொச்சின் அமலாக்கத்துறையினர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் ஆர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை முதல் சென்னை போயஸ் கார்ட்டன் பகுதியில் உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வீடு மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூன் அலுவலகம் உள்பட 3க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு குறித்தான விவரம் தெரியவரும். காலையில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசாருடன் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.