மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அரசு, அதற்கான பட்டாவும் வழங்கியது. இந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன், இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பியுள்ளார்.
கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி பஞ்சாயத்து தலைவர் மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என குறிப்பிட்டு, இந்த தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் மோகனுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, எல்லாருடைய வாழ்க்கையும் கடவுளின் ஒரு வரம், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல வண்ண அழகிய காகிதங்களால் சுற்றப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கை மட்டும் பல நூற்றாண்டுகளாக பச்சாதாபம் கொண்டதாகவும் உள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் நிலையை தெரிவிக்க முடியாததால் இந்த சமுதாயத்தால் மிக மோசமாகவும், சொந்த குடும்பங்களாலும் இரக்கமின்றியும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
ஆசிர்வாதங்களுக்காக மட்டுமே பார்க்கப்படும் இவர்கள், அவதூறாக சித்தரிக்கப்படுவது முரண்பாடாக உள்ளது. மனிதத்தன்மையற்ற செயலால், சமுதாயம் தரும் வலி மற்றும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் இதுவரை சரியான முறையில் கிடைக்கவில்லை. சமூக நலன் கிடைக்க போதுமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். நாடு சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏன் இந்த பாரபட்சம்? இன்னும் ஏன் அகற்ற முடியவில்லை? என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். அவர்களுக்கான உரிமைகளை வழங்க சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்று தங்கள் உரிமைகளை பெற ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவருக்கு எதிராக செயல்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.
கிராமத்தில் நடைபெறும் அனைத்து மத வழிபாட்டு சடங்கு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.