சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் துவாக்குடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் ரூ.1165 வரை கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெறும் போராட்டமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் துவாக்குடி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டமும் இன்று நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்து வரும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் அதிகாலை முதல் உயர்ந்தது. இந்த உயர்வானது ஏற்கனவே காருக்கு ஒரு நடைக்கு ரூ.75 இருந்த நிலையில் தற்போது ரூ.80 ஆகவும், இரு முறை பயன்பாட்டிற்கு ரூ.110 ல் இருந்து ரூ.120 ஆகவும் மாதாந்திரம் ரூ.2,210ல் இருந்து ரூ.2,420 ஆகவும் உயர்ந்தது.
அதேபோல் டாட்டா ஏஸ் போன்ற வாகனங்களுக்கு ஒரு நடைக்கு ரூ.130 இருந்தது தற்போது ரூ.140 தாகவும், இரு முறை பயன்பாட்டிற்கு ரூ.190ல் இருந்து ரூ.210வும் மாதாந்திர கட்டணம் ரூ.3870ல் இருந்து 4230 ஆகவும் உயர்ந்தது.
பஸ் ஒரு நடைக்கு ரூ.260 இருந்தது தற்போது ரூ.280 தாகவும்,இரு முறை பயன்பாட்டிற்கு ரூ.385ல் இருந்து ரூ.425 ஆகவும் மாதந்திரம் ரூ. 7735ல் இருந்து 8465 ஆகவும் கட்டணம் உயர்ந்தது.
டாரஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ஒரு நடைக்கு ரூ.415ல் இருந்தது தற்போது ரூ.455 தாகவும், இரு முறை பயன்பாட்டிற்கு ரூ.620ல் இருந்து ரூ.680 ஆகவும் மாதாந்திரம் ரூ.12435ல் இருந்து ரூ.13600 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
'இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். அதனால் அப்பாவி பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்' என்பதை வலியுறுத்தி வாகன ஓட்டிகளிடம் கட்டண உயர்வுக்கு எதிராக திருச்சி மாநகர் தேமுதிக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் கையெழுத்து பெறும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் துவாக்குடி நகர நிர்வாகி சிங்காரவேல் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் விஜய சுரேஷ், மகாமுனி, முத்துராமன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் "ஆயிரம் வாகன ஓட்டிகளிடம் விலாசம் செல்போன் எண்ணுடன் கையெழுத்து வாங்கும் போராட்டத்தை திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் நடத்துவதுடன், அதைக் கொண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து வழக்கு தொடுக்கப்படும். ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் நிலையில் தற்பொழுது சுங்கக் கட்டணமும் உயர்ந்துள்ளது.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பால் பண்ணை வரை சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படவில்லை. மேலும், சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதோடு சுங்கச்சாவடியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை.
மேலும், சாலையின் நடுவே ஏற்படும் மாசைத் தடுப்பதற்காக உள்ள செடிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இவர்கள் மக்களுக்கு சேவை செய்யவில்லை, கட்டண வசூல் செய்வதே இவர்களது குறிக்கோள். இதனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும்" என்றார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களை திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் துவாக்குடி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி ஆகியோர் அடங்கிய போலீசார் தடுத்து நிறுத்தியதையும் மீறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்த முற்றுகை போராட்டத்தால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஷானு