திருவள்ளூர்: மண் குவாரியில் டிரைவர் வெட்டிக்கொலை - என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம் அக்கரப்பாக்கம் ஊராட்சி ஏரியில் உள்ள சவுடு மண் குவாரியில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்டவர்
கொலை செய்யப்பட்டவர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அக்கரப்பாக்கம் ஊராட்சி ஏரியில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் பிரகாஷ் (31), சூர்யா (29) சவுடு மண் எடுக்க குவாரிக்கு வந்துள்ளனர்.

மண் ஏற்றிக்கொண்டு 2 லாரிகளும் வெளியில் வந்தபோது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பிரகாஷ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்து மற்ற டிரைவர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அலறி ஓடினர். தகவலறிந்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பிறகு பிரகாஷின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழிமறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான பகையில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்னையா? என, பல்வேறு கோணத்தில் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com