திராவிட மாடலை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றத் தொடங்கிவிட்டர்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இரண்டு சாதனையை விளக்கும் வகையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகச் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டு ரூ.68 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை பெறும் 500 பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை வழங்கினார்.
மேலும், நெல்லை மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு நபர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாகத் தலா ரூபாய் 4 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் விழா பேருரையாற்றிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ”இந்த அரசு அமைவதற்கு முன்பு தமிழக முழுவதும் 4.38 லட்சம் மனுக்கள் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் கேட்டு கொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்தது. இந்த அரசு அமைந்த பின்னர், அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டு தற்போது 785 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது.
மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2.58 கோடி பேர் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டுக் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 1440 பள்ளிகள் சேர்க்கப்பட்டுச் செயல்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டுப் பல ஆயிரம் பள்ளிகள் சேர்க்கப்பட்டு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தகுதியானவர்கள் யாராக இருந்தாலும், இந்தத் திட்டத்தின் கீழ் அவர்களுக்குப் பணம் வழங்கப்படும்.
கடந்த 23 மாதத்தில் 4 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.பலர் பல விமர்சனங்களை அள்ளி தூவினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எதற்கும் அஞ்சாமல் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் தத்துவத்தை முன்னெடுத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
திராவிட மாடல் தத்துவம் இந்தியா முழுவதும் பரவி அனைத்து மாநிலங்களும் தமிழகத்தின் திட்டங்களைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். ஏழை, எளிய மக்களைப் பற்றி முதல்வர் சிந்திக்கிறார் என்பதற்குச் சாட்சியே ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவது” என்றார்.