கரூரில் அமைச்சர் கார் போல் அறங்காவலர் தலைவர் கார் உள்ளதால் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கரூர் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ் தனது காரின் முகப்பில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் மற்றும் நீதிபதிகள் வைத்திருக்கும் தமிழக அரசு சின்னம் பொறித்த பித்தளை சின்னத்தை வைத்துக்கொண்டு பல ஊர்களுக்கு சென்று வந்துள்ளார். இந்த சின்னம் பொறித்த காரில் தனது கட்சியான தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு நகர்வலம் வந்த போது, சில சமூக ஆர்வலர்கள் இந்த காரை போட்டோ எடுத்து வலைத்தளத்தில் பதிவு செய்து விட்டார்கள்.
இதுபற்றி நாம் விசாரித்த போது,கரூர் வெங்கமேட்டை சேர்ந்த பால்ராஜ் அறங்காவலர் குழு தலைவர் ஆன நாளிலிருந்து இந்த தமிழக அரசு சின்னம் பொறித்த பித்தளை சின்னத்தை காரில் வைத்து கொள்கிறார். இதன் மூலம் டோல் கேட்டில் பணம் செலுத்தாமல் செல்கிறார். இந்த காரை அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி அட்ராசிட்டி செய்கிறார்.
அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் இந்த அரசு சின்னத்தை இவர் பயன்படுத்தி வருவதை அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றனர்.
இந்த கார் குறித்து கரூர் கலெக்டர் பிரபுசங்கரிடம் கேட்டோம். இந்த கார் பற்றிய தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட ஆர்.டி.ஓ.விடம். சொல்லியிருக்கிறேன் நடவடிக்கை நிச்சயம் உண்டு என்றார்.
-கரூர் அரவிந்த்