நத்தம் அருகே சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனை கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பி, தங்கை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சக்கிலியான் கொடையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55)விவசாயி. இவர் மாடுகள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் படுகாயங்களுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் தூக்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கண்ணன் அவரது நெருங்கிய உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை மறைக்க அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட இறந்தவரை தோட்டத்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டதும் தெரிய வந்தது. தீவிர விசாரணையில் இறங்கிய சாணார் பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உறவினர்களை விசாரணை செய்ததில் கொலையில் தொடர்புடைய 9 பேர் வசமாக சிக்கினர்.
இறந்த கண்ணனின் சகோதரி அழகி, அவரது கணவர் சின்னக்காளை, மகன் அழகர்சாமி, கண்ணனின் தம்பி முருகன், அவரது மனைவி வெள்ளையம்மாள், மகன்கள் சதீஸ்குமார், குணா மற்றும் உறவினர்கள் நாச்சம்மாள், வெள்ளைச்சாமி ஆகிய 9 நபர்களும் கொலையில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது 2 1/2 ஏக்கர் சொத்துக்க தகராறு ஏற்பட்டு இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் 9 பேர் மீதும் சாணார் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.