திண்டுக்கல் அருகே ஜம்புதுரைகோட்டை ஊராட்சியில் ரூ.1.50 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜம்புதுரை கோட்டை ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. சுமார் 15,000-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஊராட்சி தலைவராக பவுன் தாய், துணைத் தலைவராக சிவராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஊராட்சியில் தொடர்ந்து ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு எந்த தகவலும் தருவதில்லை என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவராமன் உட்பட ஏழு வார்டு உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
ஊராட்சி துணைத்தலைவர் சிவராமன் கூறுகையில், “எங்களது ஊராட்சியில் மொத்தம் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் ஊராட்சி பகுதிகளில் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் திட்டங்களுக்கு துணைத்தலைவரின் டிஜிட்டல் கார்டு பயன்படுத்த வேண்டும். தற்போது வரை மூன்று வருடங்களுக்கு மேலாக டிஜிட்டல் கார்டை துணைத்தலைவரான எனக்கு வழங்கவில்லை. ஆனால் தொடர்ந்து ஊராட்சி முழுவதும் பல்வேறு திட்டப்பணிகள் முடிந்ததாகக் கூறி ஊராட்சி தலைவர் பவுன்தாய், ஊராட்சி செயலர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காட்டு ராஜா ஆகிய மூன்று பேரும் இணைந்து தொடர்ந்து ஊராட்சி மன்றத்தில் உள்ள நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்திச் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்துள்ளனர்.
மேலும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்குத் திட்டங்கள் ஒதுக்குவதோ, திட்ட நிதிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து யாருக்கும் தெரியாது.
மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் வேலைகள் அனைத்தையும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காட்டு ராஜாவே தொடர்ந்து வேலை செய்து வருகிறார். இதனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கார்டையும் பயன்படுத்திப் பல கோடி ரூபாயை ஊழல் செய்து வருகின்றனர். இவர்கள் மீது வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து ஊழல் செய்து வரும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆகிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.