தருமபுர ஆதீன கல்லூரியில் நாளை நடைபெறும் பவள விழாவில் முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆதீனம் மற்றும் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறையில் சைவைத்தையும், தமிழையும் பரப்பி வரும் தொன்மையான தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. அருகிலேயே ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுர ஆதீன கலைக்கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரி தொடங்கப்பட்ட 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, பவளவிழா கொண்டாடப்படுகிறது.
கல்லூரி வளாகத்தில் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலையரங்கத்தை நாளை மாலை 5 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் தருமபுர ஆதீன ஒலி, ஒளிப்பதிவக தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை திறந்து வைத்து பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன விளக்கவுரை நூலை வெளியிட்டும் பேசுகிறார்.
பவள விழாவிற்கு முதலமைச்சர் வருகை தரவுள்ளதால், நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை தருமபுர ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பார்வையிட்டார். அத்துடன் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
பின்னர் குருமகாசந்நிதானம் , “25வது ஆதீனம் காலத்தில் தமிழ்க்கல்லூரியாக தொடங்கப்பட்டு 26வது ஆதீனம் காலத்தில் கலைக்கல்லூரியாகி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வெள்ளிவிழா ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். பொன்விழா ஆண்டின் போது அப்போதைய கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது 75வது பவள விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்வது சிறப்புக்குரியது.” என்றார்.
24ம்தேதி முதல் நிகழ்ச்சியாக தரும கல்லூரி பவள விழாவில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள் 25ம்தேதி கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கிவைப்பதோடு, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மறுநாள் 26ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திருவாரூர் செல்பவர் 27ம் தேதி நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அன்று மதியமே திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்வரின் 4 நாள் வருகையையொட்டி ,பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.