துபாய் நாட்டில் இறந்து போன மகனின் உடலை தாயகம் கொண்டு வர மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீர் மல்க தாய் மனு கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல் ஓடை சேர்ந்தவர் பிறை மாறன். இவரது மனைவி சசி. இவர்களது மூத்தமகனான பிரதீப் (வயது24) துபாயில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ந்தேதி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இறந்த தனது மகனின் உடலை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதீப்பின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் இன்று காலை கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், "நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக முடசல் ஓடை மீனவ கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களின் மூத்த மகன் பிரதீப், கடந்த 2021-ம் ஆண்டு துபாய் நாட்டிற்கு வேலைக்காக சென்றார். அங்கு சுற்றுலா படகில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 29-ந்தேதி பணியில் இருக்கும் போது எனது மகன் கடல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதோடு இறந்த போன எனது மகன் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நேற்று வந்த தகவலில் பிரதீப் -ன் உடலை கண்டெடுத்துள்ளதாக உள்ளதாக தெரிவித்தனர். எனவே எங்கள் மகனின் உடலை விரைந்து மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்க்க அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவை பிரதீப்-ன் தாய் சசி ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.