தன் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தால் ஆத்திரத்தில் இளைஞர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது காலம் காலமாக நடந்து வரும் சம்பவங்கள் ஏராளம். அப்படியொரு சம்பவம் கடலூரில் நடந்து அதிர வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம், கே.என்.பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதான சக்தி ஆகாஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் தெரிய வரவே பெண்ணின் பெற்றோர்கள் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைத் தடுத்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சக்தி ஆகாஷ் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.
இதனால், ஏமாற்றம் அடைந்த சக்தி ஆகாஷ் விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், மிக்ஸி, உள்ளிட்ட பொருட்களை உடைத்துள்ளார். கீழே சிதறி உடைந்து கிடந்த கண்ணாடியை எடுத்து திடீரென சக்தி ஆகாஷ் தனது வயிற்றில் குத்திக் கொண்டார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை உள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். சக்தி ஆகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்டம், திருப்பாப்புலியூர் காவல்துறை விசாரணை நடத்தியதில் சக்தி ஆகாஷ் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றொருவருக்குத் திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்தது. சக்தி ஆகாஷ் தனது பெற்றோர்களிடம் ஏன் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கூறியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.