தமிழகம் முழுவதும் ஆகமங்கள் பின்பற்றாமல் கோவில்களில் மூடி வைக்கப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆகம விதிப்படி கிழக்கு பக்கம்தான் ராஜ கோபுரம் இடம் பெற வேண்டும் எனவும், இந்த கோவிலில் வடக்கு பக்கம் பார்த்து கோபுரம் கட்டப்பட உள்ளதாக மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அறநிலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் மீது படையெடுப்புகள் காரணமாக கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பஞ்சரத்ன ஆகமப்படி, எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக் கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆகமங்கள் பின்பற்றாமல் கோபுரங்களை கட்ட முடியாது என எதிர்ப்பு தெரிவித்தபோது, அரசு அமைத்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைக்க கூடாது என்று நீதிபதிகள் கண்டித்தனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னோருக்கு தெரியாத ஆகமம் இப்போது உள்ளவர்களுக்கு தெரிகிறது என கேள்வி எழுப்பி, அனைத்து கோவில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
1726ஆம் ஆண்டு பிறந்த அகோர சிவாச்சாரியார் எழுதிய ஆகமத்தின் படி சில கோவில்களில் வடக்கு கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.