அமைச்சர் செந்தில் பாலாஜியை பணம் மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் கைது செய்த நிலையில் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார்.
இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையின் பரிந்துரைப்படி செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியும்’ என வாதிட்டார்.
மேலும் ‘சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?
நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்குமாறு அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது’ என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுட்டிக்காட்டினார்.
மேலும் ‘காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத்துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை?’ என கேள்வி எழுப்பிய கபில் சிபல் ‘அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனையால் விசாரிக்க முடியவில்லை என்றால் அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்’ என்றார்.
அதேப்போல் ‘மருத்துவர்களிடம் சொல்லி போதிய ஏற்பாடுகளுடன் அவரிடம் விசாரணை செய்திருக்கலாம். காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிலையில் காவலில் எடுக்காததால் முதல் 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக கருத கூடாது என்று அமலாக்கத் துறை கோர முடியாது’ என்றார்.
அப்போது நீதிபதி, ‘மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ஏதேனும் தடை இருந்ததா?’ என கேள்வி எழுப்பியதற்கு ‘எந்த தடையும் இல்லை என்று மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதித்ததாக அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது’ என வாதிட்டார்.
மேலும் ‘ஆரம்பம் முதலே அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறியுள்ளது. சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளது. எனவே நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது’ என கூறி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என தெரிவித்துள்ளனர்.
கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால் அது சட்டவிரோதம்.
செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பிறகு நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நிராகரித்த அமர்வு நீதிமன்றம் நடைமுறை சரியானதல்ல’ என்று வாதிட்டார்.
அப்போது, ‘கைதுக்கான காரணங்கள் தொடர்பான ஆவணத்தை வழங்கியபோது செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்?’ என கேட்ட நீதிபதி, ‘கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டு இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்’ என்று கூறினார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ‘கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பின்னர் திருத்தப்பட்டு உள்ளன. இது முறைகேடு’ என வாதிட்டார்.
மேலும், ‘ஜூன் 13ம் தேதி சோதனை தொடங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். வாக்குமூலமும் அளித்தார். ஆனால் ‘செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ என அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்’ என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறினார்.
மேலும் ‘காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் காவலை திரும்ப வழங்கி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது’ என வாதிட்டார்.
மேலும், ‘காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்றத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பிய மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்கவில்லை’ என்றும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குறிப்பிட்டார்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நாளை தள்ளி வைத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.