சீட்டு நடத்தி ரூ.4 கோடிக்கு மேல் சீட்டிங் செய்த தம்பதி கைது!

திருவள்ளூர் அருகே கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிலையில், அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீட்டு நடத்தி மோசடி செய்த பிரேம் ஆனந்த்-மஞ்சுளா
சீட்டு நடத்தி மோசடி செய்த பிரேம் ஆனந்த்-மஞ்சுளா

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா- பிரேம் ஆனந்த் தம்பதி ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு, மளிகை பொருட்கள் சீட்டு, நகை பண்டு சீட்டு என்று விதவிதமான சீட்டு வகைகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி 100-க்கும் மேற்பட்டோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் சீட்டு நடத்திய தம்பதி பிரேம் ஆனந்த்- மஞ்சுளா மற்றும் இவரது உறவினர் விக்னேஸ்வரி ஆகிய மூன்று பேர் மீது மோசடி செய்து தலைமறைவாகி விட்டதாக புகார் அளித்தனர்.

அந்த புகாரில் ஏலச்சீட்டு, நகை பண்டு சீட்டு நடத்திய மஞ்சுளாவிடம் பணம் கட்டியவர்கள், பணத்தை திருப்பி தருமாறு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அவரும் பணத்தை திருப்பி தருவதாகவும், தன் மேல் புகார் எதுவும் அளிக்க வேண்டாம் எனவும், கேட்டுக் கொண்டதால் இதுவரை புகார் அளிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

சீட்டு மோசடி
சீட்டு மோசடி

இதற்கிடையில் செப்டம்பர் 14ம் தேதி அன்று மஞ்சுளா வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும், அவரது கணவரும் சொந்த வீட்டையே சத்தம் தெரியாமல் வேறொருவருக்கு விற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.

பிரேம் ஆனந்த்-மஞ்சுளாவிடம் சீட்டு கட்டியிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அனைவரும் ஒன்று திரண்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி செய்த கணவன் மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மயிலாடுதுறை, சீர்காழியில் பதுங்கி இருந்த இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன் பின்பு ஆவடி ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கணவன் மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com