சீர்காழி அருகே திருநகரி உப்பனாற்றில் கடல் தண்ணீர் உட்புகுவதை தடுக்கவும், தண்ணீரை தேக்கவும் அதிமுக ஆட்சியில் ரூ.30.96 கோடியில் கதவணை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகள் ஆகியும் மெத்தனமாக நடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உப்பனாறு அமைந்துள்ளது. சீர்காழி அருகே கொண்டல் தலைப்பிலிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், பனமங்கலம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், திருநகரி, காரைமேடு, புதுத் துறை, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுல்லைவாசலில் கடலில் கலந்து வருகிறது. இந்த உப்பனாறு மூலம் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது.
இந்நிலையில், கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுவதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது. இதனால் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் உப்பனாற்றில் தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நபார்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கியது. ரூ.30 கோடியே 96 லட்சத்தில் திருநகரியில் உப்பனாற்றின் குறுக்கே கதவனை கட்டும் பணிகள் தொடங்கியது. இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடைய வேண்டும்.
ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாததால் 30 கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியாமல் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 240 மீட்டர் நீளத்திற்கு கதவணை அமைக்கப்பட்டு வரும் நிலையில் இதில் 39 ஷட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. அவற்றின் 18 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மீதமுள்ள பணிகள் மெத்தனமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள், கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்பு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது.
வரும் மழை காலத்திற்குள் பெரும்பாலான பணிகளை நிறைவு செய்து மழை நீரை தேக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ பி.வி பாரதி பணி நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பணிகளை விரைவுப்படுத்த கேட்டுக்கொண்டார்.
மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திமுக அரசு மெத்தனமாக செயல்படாமல் பணிகளை மழைகாலத்திற்குள் முடிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆர்.விவேக் ஆனந்தன்