திருச்சி: ரயில் பாதையில் சதி வேலை - விசாரணை வளையத்தில் 8 பேர் - அதிர்ச்சி தகவல்

செல்போன் டவர் சிக்னலை வைத்து 8 பேரிடம் போலீஸ் விசாரணை
விசாரணை வளையத்தில் 8 பேர்
விசாரணை வளையத்தில் 8 பேர்

திருச்சி வாளாடி அருகே ரயில் பாதையில் கடந்த 2-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் டயரை போட்டு சதிவேலை செய்த சம்பவத்தில், 8 பேரை காவல்துறை விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளது.

கடந்த 2-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்றது. நள்ளிரவு 1 மணி அளவில் திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் - வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே நின்ற நிலையில் ஒரு டயரையும், படுக்க வசதியில் ஒரு டயரையும் போட்டுள்ளனர். இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார்.

இருப்பினும், நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இருந்த டயர் ரயில் இன்ஜின் முன்பக்கம் தட்டி தண்டவாளங்களுக்கு வெளியே வீசப்பட்டது. மற்றொரு டயர் ரயில் என்ஜினில் மாட்டியதால் இன்ஜினின் மின் ஒயர் கேபிள்கள் துண்டானது. இதனால் 4 பெட்டிகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து ரயில் இன்ஜின் பைலட் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் இருப்பு பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

விபத்து நடந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் சூழலில் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் நடந்த இடத்தில் நேற்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விசாரணை செய்தார்.

இந்த சதி செயல் குறித்து விசாரிக்க டி.எஸ்.பி. அஜய்தங்கம் தலைமையில் 2 தனி படைகளும், ரயில்வே போலீசார் சார்பில் 2 தனி படைகளும், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 1 தனிப்படை என மொத்தம் 5 தனிப்படைகள் அமைத்தார்.

சுரங்கப்பாதை எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரயிலை தவிர்க்க சதி செய்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், வாளாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், தண்டவாளத்தின் நடுப்பகுதியில் வைக்கப்பட்ட டயர் யாருடையது என்று விசாரணை செய்தபோது, அது ரயில் பாதை அருகே வசிக்கும் கலையரசன் என்பவருடையது என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் கலையரசனை விசாரணை செய்ததில் கலையரசனுக்கு சொந்தமான லாரி டயர் பழுதடைந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாற்றி உள்ளார். அந்த டயரை அவர் வீட்டின் முன்பு வைத்துள்ளார். அதை மர்ம நபர்கள் எடுத்து தண்டவாளத்தில் வைத்துள்ளனர் என தெரிய வந்தது.

சம்பவம் நடைபெற்ற 4 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து செல்போன் டவரை வைத்து யார் யார் அந்த பகுதியில் வந்துள்ளார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், லால்குடி சராக காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையான தனிப்படை குழுவினர் செல்போன் டவர் சிக்னலை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த 8 பேரின் செல்போன் எண்கள் பதிவாகியுள்ளதால் சந்தேகத்தின் பேரில் 8 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com