சிவகங்கை மாவட்டம், பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகன் தங்கப்பாண்டி. நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தங்கப்பாண்டி தேர்ச்சி அடைந்து 438 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதையடுத்து மாணவர் தங்கப்பாண்டியை ஆட்சியர் உள்ளிட்ட பலர் பாராட்டி இருந்தனர். இதற்கிடையே மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர் இன சாதியை பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றி சமீபத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு இருந்தது.
இதனால் தங்கப்பாண்டி கல்லூரியில் சேர்வதற்கு மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதி சான்று தடையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதி சான்றை பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றித்தர வேண்டும் என தங்கப்பாண்டி விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஒரு வாரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் சான்று வழங்காமல் தாமதித்ததாக புகார் எழுந்தது.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உடனடியாக தலையிட்டு மாணவன் தங்கப்பாண்டியனுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழை வழங்கினார். கலெக்டரின் துரிதமான செயல் மாவட்ட மக்களையே நெகிழச்செய்தது.