கோவை: சட்ட விரோத மது பார் - தி.மு.க-வினர் வன்முறை - எடப்பாடி பழனிசாமி புகார்

'கோவை மாவட்ட தி.மு.க செயலாளர் ரவி என்பவரின் ஆதரவில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறது' என புகார்
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'கோவையில் சட்ட விரோத மது பாரில் அப்பாவி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கு தி.மு.க-வினரின் வன்முறைமுறையே காரணம்' என்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் போலி மது பானங்கள் விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரடிமடை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55) என்பவரை, தி.மு.க இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகியோர் அடித்துக் கொலை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தி.மு.க இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கிராமங்களில் சட்ட விரோதமாகவும், கூடுதல் விலைக்கும் மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், மூன்று நாட்களுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் தி.மு.க நிர்வாகியின், சட்ட விரோதமாக மது விற்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, ஏன் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து தி.மு.க-வின் இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல், கோகுல் மற்றும் உடனிருந்த அடியாட்கள் கரடிமடைக்குச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் செல்வராஜை அடித்து இழுத்துச் சென்று காட்டுப்பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இறந்த செல்வராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை முடித்த காவல் துறையினர், உடனடியாக செல்வராஜின் உடலை எரிக்குமாறு அவரது குடும்பத்தினரை வற்புறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பவம் நடைபெற்ற கிராமங்களுக்குத் திமுக ரவுடிகள் சென்று அங்குள்ள மக்களிடம் யாரும் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டுவதாக கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்புடனும், பதற்றத்துடனும் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கோவை மாவட்ட தி.மு.க செயலாளர் ரவி என்பவரின் ஆதரவில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோத மது விற்பனை நடந்து வருவதாகவும், ஆனால், கோவை காவல் துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக

பொதுமக்கள் கூறுவதோடு, ஊடகங்களும் தெரிவிக்கின்றன. காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் செல்வராஜின் கொலை சம்பவம் நடந்திருக்காது.

ஏற்கெனவே, காவல் துறை, கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையை முளையிலேயே கிள்ளியிருந்தால், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்திற்கு 23 பேர் பலியாகியிருக்க மாட்டார்கள்.

இந்த சட்ட விரோத மது விற்பனை மற்றும் கொலை சம்பவங்களுக்குக் காரணமான ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைவர் மீதும், சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவலர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com