மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் துரித உணவகத்தில் வைத்து இளைஞர் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலா என்ற பாலாஜி (22). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மண்ணூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மதுபான கடையில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அருகில் இருந்த பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அதே கடைக்கு மதுபோதையில் வந்த அயனாவரம் பகுதியை சேர்ந்த மர்ம நபர்களுக்கும், பாலாஜிக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே பாலாஜி தனது ஹெல்மெட்டினால் எதிர்த்தரப்பை தாக்கியுள்ளார்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் 3 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியை தலை மற்றும் காதில் வெட்டியுள்ளனர்.இதனால் நிலைகுலைந்த பாலா அங்கேயே சரிந்தார். உடனே அந்த கும்பல் தாங்கள் வந்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் பாலாஜியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.