வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவதத்தை செலுத்த நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களது நிறுவனத்தின் தயாரிப்பதற்காக திட்டமிட்டபட்டிருந்த "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிப்பதாக நடிகர் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசனுக்கு மொத்தம் ஒன்பதரை கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில்,முன்பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021ம் ஆண்டு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வரவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே,கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலம்பரசனுக்கு நான்கரை கோடி ரூபாய் கொடுத்ததாகவும் அதற்கான வரவு செலவு விவரங்களையும் தாக்கல் செய்ததோடு, குறிப்பிட்ட தொகை ரொக்கமாக அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஒப்பந்தத்தில் உள்ளபடி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினத்திற்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.