சென்னை வேளச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இங்கு இருவேறு வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களிடையே கோஷ்டி தகராறு அவ்வபோது ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பும் அடிக்கடி மோதி கொண்டனர்.
அதேபோல் இன்று காலை வழக்கம் போல், மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர்.அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.அப்போது, மர்ம கும்பல் ஒன்று திடீரென கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
இதில் நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் கல்லூரி வளாகமே அதிர்ந்தது.இதன்காரணமாக அங்கு நின்றிருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.