செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (33). இவருக்குத் திருமணம் ஆகாத நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 10-மணியளவில் தனது நண்பரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று மனோகரனை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர்.
இதனால் நிலை தடுமாறிப் போன மனோகரன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி அருகிலிருந்த பள்ளிக்கூட தெருவில் உள்ள ஒரு வீட்டில் பின்பக்கமாகச் சென்று பதுங்கி உள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் மனோகரனைச் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் மனோகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனோகரனுக்கும் பெண் காவலர் ஒருவருக்கும் கள்ளக்காதலால் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.