அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ‘ ஜெயலலிதா குறித்து பேசுவதற்கு எந்த தராதரமும், யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை.
இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ, ஒரு கவுன்சிலராகக்கூட பதவி வகிக்காத அண்ணாமலைக்கு எதிராக நாங்கள் மட்டுமல்ல. அவர்களது கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கின்றனர்.
இந்தியாவில் ஊழல் செய்ததற்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால், அது பா.ஜ.க-வின் தலைவர்தான். அதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
ஏனென்றால் அப்போதெல்லாம் அண்ணாமலை பா.ஜ.க-விலேயே இல்லை. அப்போதெல்லாம் எங்காவது காவல் நிலையத்தில் மாமூல் வாங்கிக்கொண்டு இருந்திருப்பார்.
பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் என கூறியபோது அண்ணாமலை மவுனமாக இருந்தது ஏன்?
அண்ணாமலை தி.மு.க-வின் ஏஜென்டாக, தி.மு.க-வின் ‘பி’ டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்னால் உதயநிதி பேசியதை வழிமொழிந்து அண்ணாமலை பேட்டிக் கொடுத்திருக்கிறார்.
அப்படியென்றால் தி.மு.க என்ன சொல்கிறதோ? அண்ணாமலை அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க என்பது வேறு, அண்ணாமலை வேறு. எனவே, அவரது எண்ணங்களை செயல்படுத்துவதற்கு நாங்கள் கிடையாது.
எனவேதான் நான் கேட்கிறேன். உங்களுக்குத்தான் அ.தி.மு.க-வை பிடிக்கவில்லையே. வெளியே செல்ல வேண்டியதுதானே? உங்களை யார் இங்கு இழுத்து பிடித்து வைத்துள்ளது? ஏன் எங்களைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கூறினார்.