வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் துரை சரவணன். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் துரை சரவணன் தனது நண்பனான அதேப் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாட்டு சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றியதில் துரை சரவணனை அவனது நண்பன் கன்னத்தில் திடீரென அறைந்துள்ளான். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த துரை சரவணன் அலறியபடி கீழே விழுந்துள்ளான்.
இதைக் கேள்விப்பட்டு துரை சரவணனின் பெற்றோர் ஓடி வந்து அவனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காட்டியுள்ளனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே துரை சரவணன் இறந்து போய்விட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்துபோன துரை சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.