கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெரியமணவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரன் (47), இவருடைய மகன் வெங்கடேசன் (21) இருவரும் நேற்று மதியம் வேலைக்காக குருபரப்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜெகநாதபுரம் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் மீது வேகமாக மோதியுள்ளனர்.
இதில் அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், வெங்கடேசன் சிறுகாயங்களுன் உயிர்தப்பினார். சந்திரன் பலத்தகாயம் அடைந்தார். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் தந்தை, மகன் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சம்பவ இடத்தில் உயிரிழந்த வாலிபர் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கரியசந்திரம் கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் (27) என்பதும், சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பனப்பள்ளி போலீசார் மல்லேஷின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் டிரைவர் மற்றும் விவசாயி ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.