தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெருவைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் விவசாயம் செய்து வருகிறார். கருங்குளம் வட்டார காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்து வந்தார். சொத்து தகராறு காரணமாக இவர் அடிக்கடி தனது வீட்டில் உள்ள உறவினர்களிடம் சண்டை போடுவது வழக்கமாம். அதேபோல அவரது தாயார் லட்சுமி இடமும் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி மாரிசெல்வம் தனது தாயார் லட்சுமியிடம் சொத்து குறித்து சண்டை போட்டு இருக்கிறார். சொத்தை தான் பிரித்து தர மறுக்கிறீர்கள். நான் செலவுக்கு என்ன செய்வேன்? எனவே பணம் கொடுங்கள் என்று தாயாரிடம் மீண்டும் பணம் கேட்டு இருக்கிறார்.
ஆனால் லட்சுமி, பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாய்ச்சண்டை கைகலப்பாக மாறிவிட்டது. அப்போது ஆத்திரமடைந்த லட்சுமி, இளைய மகன் மணிகண்ட சங்கருடன் சேர்ந்து மாரிசெல்வத்தை கம்பால் சரமாரியாக அடித்து தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மாரிச்செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மாரிசெல்வத்தை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் மாரிசெல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, மணிகண்ட சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். காங்கிரஸ் நிர்வாகியை தாய், தம்பி அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.