தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி, கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தை கடந்த 15.03.2023 அன்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவர் ஆய்வு மேற்கொண்டுவிட்டு பின், அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கவில்லை என்று அவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதன் பேரில் ஆலோசகர் மனோகரன் அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஆவணங்களின் நகல்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
அதற்கு தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக், "திருச்சியில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் எங்களுகளை முறையாக கவனித்து விடுகிறார்கள். ஆனால், உங்கள் நிறுவனத்தில் இருந்து மட்டும் எங்களை கவனிக்காமல் இருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால் உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் தெரியுமா ?" என்று கூறிவிட்டு, "15000 லஞ்சமாக கொடுங்கள்.
உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன், மேற்படி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுவிட்டு, தன்னிடம் லஞ்சம் கேட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று 3.5.2023 மாலை சுமார் 4 மணியளவில் மனோகரனிடம் இருந்து தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் 15,000 ரூபாய் லஞ்சமாக வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் நுழைந்து ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றவர்களாக தொழிலாளர் நலத்துறையினர் உள்ளனர். தொழிலாளர்களை சரியாக நடத்தவில்லை, அவர்கள் குறித்த பதிவேடுகளை சரியாக பராமரிக்கவில்லை, அங்கே இருக்கும் தராசுகளுக்கு வருடாந்திரம் தொழிலாளர் நலத்துறையிடம் வைத்துக் கொள்ள வேண்டிய சீல் வைத்துக் கொள்ளவில்லை என்பது உள்ளிட்ட எந்த காரணத்தை சொல்லி வேண்டுமானாலும் அவர்களை குற்றவாளியாக்க முடியும். இது தொழிலாளர் நலத்துறையின் ஆக்டோபஸ் கரங்களுக்கு அல்வா கிடைத்தது போல் ஆகிவிட்டது.
வணிகர்களும் செய்யும் தொழிலை விட்டுவிட்டு யாரிடமாவது போய் புகார் கொடுக்கவோ அல்லது இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ விரும்புவதில்லை. 'ஐயா நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள். அதை செய்து விடுகிறேன்' என்று சொல்வார்கள். இது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் காட்டில் மழை பெய்ய ஏதுவாக அமைந்துவிட்டது.
இந்த கைது நடவடிக்கை நீண்ட காலமாக வேதனையில் வெந்து கிடந்த வணிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல் ஆகி இருக்கிறது. அவர்கள் மத்தியில் ஒரு மறைமுக கொண்டாட்டமே நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.