திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனத்தை எதிர்த்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த T.S. சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அரசாணையோ? அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்போ? இல்லாமல் ஜீவானந்தம் என்பவர் கடந்த ஜூலை 1ம் தேதி பதவியேற்றதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவராக செயல்பட தடை விதிக்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.சௌந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, அறங்காவலர் குழு தலைவராக பின்வாசல் வழியாக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதாக கூறுவது தவறு என்றும், உரிய வழிமுறைகளை பின்பற்றியே நியமனம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும்,அவரது சகோதரர் அரசியல் கட்சியில் இருப்பதற்கும், ஜீவானந்தம் நியமனத்திற்க்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.வீரராகவன்,கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜூலை மாதம் 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், ஒன்றாம் தேதியே அமைச்சரால் அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
இதனையடுத்து, அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் செயல்பட தடை விதிக்க கோரிய மனுதாரரின் மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து சட்டப்படி முடிவெடுக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.