திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் தி.மு.க முதல் குடும்பத்துடன் தொடர்புடைய பினாமி தகவல் அடங்கிய தி.மு.க ஃபைல்ஸ் 2 ஆவணங்கள் மற்றும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் தமிழக ஆளுநர் ரவியிடம் வழங்கப்பட்டு இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் கரு.நாகராஜன், வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் உள்பட முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது தி.மு.க அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க முதல் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கக்கூடிய பினாமிகள் தகவல் அடங்கிய DMK FILES-2 என்ற கோப்பு மற்றும் ஆவணங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கப்பட்டதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று சந்தித்தோம்.
அப்போது ஆளுநரிடம் தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய தி.மு.க ஃபைல்ஸ் 2 ஆவணங்கள் மற்றும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை வழங்கியுள்ளோம்.
மேலும் இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என அண்ணாமலை கூறியுள்ளார்.