காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலைகள் அதிக அளவில் இருப்பதால் தினசரி மாலை நேரங்களில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, குன்றத்தூர் சாலை மற்றும் திருவள்ளூர் சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்தை நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. ஆம்புலன்ஸ் மேற்கொண்டு செல்வதற்கு வழியில்லாமல், அதன் ஒலியை அதிகப்படுத்தியும், "வழி விடுங்க, வழி விடுங்க அவசரம்" என ஒலிபெருக்கி மூலம் கூறியும் எந்த வாகனமும் வழி விடாமல் முந்தி செல்வதையே தங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தது.
முன்னாள் செல்லும் வாகனங்கள், எதிரில் வரும் வாகனங்கள், பின்னால் வரும் வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஆம்புலன்ஸ் உள்ளே உயிர் ஒன்று போராடிக் கொண்டிருக்கிறது அதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சென்றது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் வாகனங்களுக்கு வழிமுறை கூறவும் போக்குவரத்து காவலர்கள் அந்த பகுதியில் இல்லாதது பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
இதுபோன்று உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல் செல்லும் வாகனங்கள் மீதும், வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன ஓட்டிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் தினசரி போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.