அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாகவும் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரவுள்ளதாகவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உயர்நீதிமன்றத்தை அனுகவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீடு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு மனு தள்ளுபடி என்று அறிவித்தது. பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோரின் அமர்வு
மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்தும் தெரிவித்துள்ளனர்.