நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகிபாபு மற்றும் பலர் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்தது. உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இப்படத்தின் 25வது நாளை ரஜினி ரசிகர்கள் வெகு விமர்சையாக பல்வேறு திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் 25 வது நாளையொட்டி ஏராளாமான ரசிகர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்பிகா திரையரங்கிற்கு வந்த நடிகர் சரவணனை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சரவணன் பேசுகையில், "நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் போல. இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என அவருக்கு எல்லாமே தெரியும்.
ரஜினியின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஒரே மாதத்தில் ஹீரோ ஆனவன் நான். ஜெயிலர் படம் ஹிட் ஆகும் எனத் தெரிந்து தான் ரஜினி இமயமலைக்கு சென்றார். ரஜினியின் வாக்கு சித்தர் வாக்கு மாதிரி. ரஜினி ஒரு கடவுள் தான். ரஜினி ஒரு சித்தர். அதை மதுரையில் உட்கார்ந்து கொண்டு சொல்கிறேன்.
ரஜினி என்றாலே எனக்கு பிடிக்கும், நடந்தால் பிடிக்கும், திரும்பினால் பிடிக்கும், ரஜினியை பார்த்து இன்று வரை அவரை போல சட்டை போட்டு வருகிறேன்.
ரஜினி பாவம் வேண்டாம், விட்டுருங்க அவர. அரசியலுக்கு அவர் வர வேண்டாம் நிம்மதியாக இருக்கட்டும், அவரை அரசியலுக்கு இழுக்காதீர்கள். ஓபிஎஸ்-ரஜினி சந்தித்து என்ன பேசினார்கள் என யாருக்குமே தெரியாது. சாப்பிட்டிங்களா குடும்பத்தில் எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கூட பேசி இருக்கலாம்" என பேசினார்.