மணப்பாறை அருகே நடைபெற்ற வினோத திருவிழாவில் உயிரோடு இருந்தவர் இறுதி ஊர்வல ரதத்தில் வந்த நிலையில் திருவிழாவில் எல்லாமே வித்யாசமாக இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூரில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழைமையான புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் திருவிழா நடைபெறும். ஆனால் சமீபத்தில் கொரோனா பெருந்தொற்று, அதன்பின் கோவில் புனரமைப்புப் பணி போன்றவற்றால் கடந்த 6 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடத்திட அணியாப்பூர், வெள்ளாளபட்டி, தவளவீரன்பட்டி ஆகிய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி சகுணம் கேட்கப்பட்டு முறைப்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் 3 ம் தேதியில் தொடங்கி நடைபெற்றது. ஏற்கனவே பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று முன்தினம் பெண்கள் முளைப்பாரி எடுத்து கோட்டை மாரியம்மன் கோவிலில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின்னர் மாலையில் பாடை வேஷம், படுகளம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திட இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என கலர் பொடிகளை தூவி தங்கள் முகங்களை வண்ண வண்ண முகங்களாக மாற்றிக்கொண்டு உலா வந்தனர். தலையில் முட்டையை அடிப்பது, ஒருவரை ஒருவர் விளக்கமாறால் அடித்துக் கொள்வது, வீட்டில் உள்ள கிழிந்த பாயை எடுத்து வந்து அடிப்பது என அனைத்துமே வித்தியாசமான திருவிழாவாக இருந்தது.
அடுத்து பாடை வேஷம் தயாரானது. ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருக்கு எப்படி இறுதிச் சடங்கு செய்வார்களோ அதே போல் தன் மகனுக்கு குழந்தை வரம் வேண்டிய அணியாப்பூரைச் சேர்ந்த தங்கவேல் என்ற (78 வயது) முதியவரின் வேண்டுதல் நிறைவேறிய நிலையில், கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க முறைப்படி அழைத்து வந்து இறுதி ஊர்வல ரதத்தில் வைத்து இறந்தவரை போல் அனைத்து காரியங்களும் செய்து கோடி எடுத்துப்போட்டு தாரை தப்பட்டை முழங்க வீடு வரை உறவு என்ற பாடல் ஒலிக்க இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வல ரதத்திற்கு முன் அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிபடுத்த அதற்கு முன் தங்களின் விருப்பம் போல் விதவிதமான வேடங்களை போட்டுக்கொண்டு பல்வேறு வாகனங்களில் முன் செல்ல அதைத் தொடர்ந்து இறுதி ஊர்வல ரதம் சென்றது.
கோவில் அருகே உள்ள வளாகத்திற்கு சென்றதும் சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் வந்து விபூதி போட்டு இறந்ததாக கருதப்பட்டு அழைத்து வந்தவரை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி வந்த பின் கோட்டை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டனர். இதையடுத்து இறுதி ஊர்வல ரதத்தில் வந்தவரிடம் அனைவரும் விபூதி பெற்றுக்கொண்டனர். நேர்த்திக்கடனை நிறைவேற்றிடும் பொருட்டு இந்த பாடை வேஷம் போட்டு வருவதாக கூறினர்.
மதியம் தொடங்கிய நிகழ்ச்சியின் மற்றொரு அம்சமாக இரவில் படுகளம் நடைபெற்றது. கோவில் முன்பு 4 பேர் படுத்திருக்க ஒப்பாரி வைத்து, தப்படித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின் அவர்கள் நள்ளிரவில் எழுப்பப்பட்டனர். விளக்கமாறு அடி, வண்ண வண்ண முகங்கள், சிறுசு முதல் பெரிசு வரை பஞ்சமில்லாத ஆட்டம், பாடையில் உயிருடன் உள்ளவரின் ஊர்வலம், படுகளத்தின் மகத்துவம் என எல்லாமே மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாகவும், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் தத்ரூப நிகழ்வாக இந்த திருவிழா அமைந்திருந்தது.
- ஷானு