செய்தியாளர்களை சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், "மதுரையில் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக 8 மாதங்களாக படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பகத்தில் படித்த 19 மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றுளனர். மதுரையில் 5 போட்டி தேர்வு படிப்பக பூங்கா தேவைப்படுகின்றது. மதுரையில் 10 ஆயிரம் மாணவர்கள் போட்டி தேர்வுக்காக படித்து வருகிறார்கள்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் ஆளும் கட்சி எதற்கு கூட்டுகிறார்கள் என மக்களுக்கு தெரியவில்லை. நேர்மையாக வந்தவர்கள் திறந்த புத்தகத்தோடு இருப்பார்கள், நேர்மையற்றவர்கள் தான் நாட்டு மக்களிடம் பயப்படுவார்கள். ஆளும் பாஜகவும் கூட்டத் தொடர் எதற்காக என மக்களிடம் சொல்ல பயப்படுகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு விடுக்கப்பட்ட அழைப்பானையில் "கவர்மெண்ட் பிசினஸ்" என குறிப்பிட்டப்பட்டு உள்ளது. எனக்கு தெரிந்து கவர்மெண்ட் பிசினஸ் என்பது பொதுத்துறையை தனியாருக்கு விற்பதும், அதானியை பலப்படுத்துவதுமே மோடி அரசின் பிரதான கவர்மெண்ட் பிசினஸாக உள்ளது.
எதோ ஒரு பெரிய நோக்கத்திற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை மோடி நடத்த உள்ளார். கேள்வி நேரம் அல்லாத கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. கூட்டத் தொடரில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எதோ அறிவிக்க போகிறார்கள். 140 கோடி மக்களை கொண்ட நாட்டில் எதற்காக கூட்டத் தொடர் என தெரியவில்லை. நாடாளுமன்ற சட்ட விதிகளை மதிக்காமல் ஒரு கூட்டத் தொடர் கூட்டப்படவுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதற்கு என தெரியாமலேயே நாடாளுமன்றத்தில் எம்.பி க்கள் நுழைய போகிறோம்" என கூறினார்.