போக்குவரத்து தலைமை காவலர் சிவபெருமான் மைக்கில் போக்குவரத்து விழிப்புணர்வை பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நேற்று திருவண்ணாமலையில் நடந்த சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் சிறப்பு பணிக்காக திருவண்ணாமலை வந்திருந்தனர்.
இந்நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அறிவொளி பூங்காவை கடந்து சென்றபோது ஒரு நிமிடம் அசந்து போனார்கள். காரணம் வழக்கமாக போக்குவரத்து போலீசார், மைக்கில் லெஃப்ட்ல போங்க, ரைட்ல வாங்க என்று சொல்லுவார்கள். உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள். ஆனால், அங்கு ஸ்பெஷல் டியூட்டியில் வந்திருந்த கடலூர் மாவட்டம், விருதாச்சலம் நகர போக்குவரத்து தலைமை காவலர் சிவபெருமான் மைக்கில் போக்குவரத்து விழிப்புணர்வை பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இரண்டு பேருக்கு மேல் பைக்கில் போகக்கூடாது. 18 வயதிற்குள் வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மட் கட்டாயம், சீல் பெல்ட் அவசியம், தங்க நகைகள், செல்போன்கள் ஜாக்கிரதை எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் குழந்தைகள் ஜாக்கிரதையோ ஜாக்கிரதை என்று சொந்த ராகத்திலும், ஹிட்டான சினிமா பாடல்கள் மெட்டிலும் பாடி அசத்தினார்.
சித்ரா பெளர்ணமி அன்று சிவபெருமானை வணங்க வந்த பக்தர்கள் இந்த தலைமைக்காவலரின் சிவபெருமான் பாடல்களைக் கேட்டு ரசித்து, பிடித்துப் போய் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்போம் என்று உறுதியளித்தனர். அதற்குள் இவர் பாடிய பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் அவரைப் பராட்டி ரொக்கப்பரிசு அளித்துள்ளார்.
-அன்பு வேலாயுதம்