சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கோட்டையில் வசிப்பவர் பாலாஜி.
இவர், தன்னுடைய தந்தை மணிமுத்து பெயரில் கல்லல் கிராமத்தில் இருந்த வீடு மற்றும் இடத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளார்.
பின்னர் கல்லல் ஊராட்சி மன்றத்தில் தன்னுடைய பெயருக்கு வீட்டு வரி ரசீது வழங்கும்படி பாலாஜி விண்ணப்பித்துள்ளார். ஆனால், பாலாஜி பெயருக்கு வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி உடனடியாக சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி கல்லல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பாலாஜி சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த தலைவர் நாச்சியப்பனிடம் லஞ்ச பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது நாச்சியப்பன் பணத்தை தன்னுடைய கார் டிரைவர் சங்கரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சங்கரிடம் பணத்தை பாலாஜி கொடுத்தபோது மறைந்திருந்த டி.எஸ்.பி ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் மற்றும் கார் டிரைவர் சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நைனா முகமது, சிவகங்கை