திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல் கனிராஜா (55). இவர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.
இவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் நாயுடுபுரம் பகுதியில் உள்ளது. இவருக்கு சொந்தமான விடுதியில் கடந்த 7 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் 2 அறைகள் எடுத்து தங்கி இருந்தனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் உடன் வந்தவர்கள் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க சென்றுவிட்டனர். பெண் மட்டும் விடுதி அறையில் தனியாக இருந்ததை அறிந்த அப்துல் கனி ராஜா அவரது அறைக்கு சென்று மருத்துவ உதவி செய்வதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞரின் மனைவி இதுதொடர்பாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனி ராஜாவை அதிரடியாக கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேல் விசாரணை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன், கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் விசாரணை நடத்தினர்.
பின்னர், அப்துல்கனி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு சென்றனர். அப்போது காவல் நிலைய வாசலில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பிறகு காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.