தஞ்சை புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள நாகப்பட்டினம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக சாலையில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாலை ஓரத்தில் இருந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த ஆலமரத்தை அப்புறப்படுத்த மாவட்ட அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆல மரத்தை பெயர்த்து எடுத்து வேறு இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்ட ஆலமரம் பாதுகாப்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. அங்கு விருட்ச வனம் திட்டத்தின் கீழ் நடப்பட்டு இருக்கும் மரச்செடிகளுக்கு மத்தியில் 9 அடி ஆழம், 18 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு மணல் பரப்பி அதன் மேல் உரங்கள் போட்டு மரம் நடப்பட்டு மண் கொண்டு மூடப்பட்டது.
வேருடன் பெயர்த்து எடுத்து வரப்பட்ட ஆல மரத்துக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தண்ணீர் ஊற்றினார். அப்போது மாவட்ட ஆட்சியர் ‘இந்த ஆல மரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அடையாள சின்னமாக விளங்கும்’ என பெருமையாக கூறினார்.