சென்னையில் வி.சி.க பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதீஷ் (29). இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும் அதேப் பகுதி தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ் (25), சுனில் (22) ஆகிய இருவரும் திடீரென அதிசிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரும் சேர்ந்து வெட்டியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதீசின் அண்ணன்கள் முரளி (33), சுகுமார் (38) உள்ளிட்ட 3 பேர் ஓடி வந்து தடுத்துள்ளனர். இதில் அவர்கள் 3 பேருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த அதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதீசின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக அதீசின் அண்ணன் மகன்கள் சேர்ந்து அதீசை கொலை செய்து தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதோடு, வி.சி.க வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.