தூத்துக்குடி: அலுவலகத்தில் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக்கொலை - அதிர்ச்சி பின்னணி
அலுவலகத்தில் புகுந்து வி.ஏ.ஒ வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர், ஏற்கனவே ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். அப்போது அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் திடீரென தகராறில் ஈடுபட்டு லூர்து பிரான்சிஸ்-ஐ அடித்து விரட்டியுள்ளார்.
இதன் பிறகு இவர் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திருவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலை அகற்றக் கோரி இவர், தனது மகன் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முறப்பநாடு பகுதி தாமிரபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க இவர் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் மர்ம நபர்கள் 2 பேர் புகுந்து அலுவலகத்திற்குள்ளேயே வைத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட வி.ஏ.ஓ பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அப்பகுதியில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து காவல்துறையினரிடம் புகாரளித்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதம் உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.