தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்
'எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்த்திடு' என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் திருச்சியில் கோரிக்கைப் பேரணி சென்றனர்.
பல்வேறு சமுதாய அமைப்புகளும் தங்களைத் தற்போது இருப்பதைக் காட்டிலும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கும்படிதான் அரசிடம் கோரிக்கை வைப்பார்கள். அப்போதுதான் அரசின் சலுகைகள் அந்தச் சமுதாயத்து மக்களுக்கு அதிகம் கிடைக்கும். ஆனால் தங்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்க்கும் படி தேவேந்திர குல வேளாளர்கள் திருச்சியில் நடத்திய கோரிக்கை பேரணி வித்தியாசமானது தான்.
தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்
திருச்சியின் மத்திய பகுதியில் தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளச் சின்னமாகத் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் முழு உருவச் சிலையை நிறுவிட வேண்டும், செப்டம்பர் 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்திட வேண்டும், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டப வளாகத்தில் தேவேந்திர சமூகத் தலைவர்களின் சிலையை வைக்காமல் புறக்கணித்ததன் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும்.
திருச்சி-துறையூர் பிரிவு ரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்க குடும்பனாரின் சிலையை நிறுவிட வேண்டி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழக அரசுக்குக் கடிதம் வாயிலாகவும், நேரடியாகவும் சென்று மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை,எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சுதந்திரப் போராட்ட மாவீரன் சுந்தரலிங்க குடும்பனாரின் முழு உருவச் சிலையை உடனடியாக அமைத்திட வேண்டுகிறோம்,
உலகமெங்கும் வாழும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அரை நூற்றாண்டிற்கும் மேலாகப் போராடி கேட்டு வரும் தலையாயக் கோரிக்கையான எஸ்.சி. பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி. பட்டியலில் சேர்த்திட வேண்டும்,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்குத் தகுதி அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அவரது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து, லஞ்சம் லாவண்யம் இன்றி அவர்களுக்குப் பணி வழங்கிட வேண்டுகிறோம்,
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பினை வழங்கிட வேண்டும், திருச்சி பஞ்சப்பூர் அருகில் அமைந்து வரும் புதிய பஸ் நிலையத்திற்குத் தேவேந்திர குல வேளாளர்களின் அடையாளமாகத் திகழும் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிறுவன தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து பேரணியாகக் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.
இந்தப் பேரணியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.