எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவிற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்
அ.தி.மு.கவின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நாளை ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டு திடலை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில், மாநாட்டிற்கு காவல்துறை நல்ல பாதுகாப்புக் கொடுத்துள்ளார்கள் என்றனர்.
பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “அண்ணா 1956-ல் திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த ஆண்டுத் தான் நான் தி.மு.கவில் இணைந்தேன். அந்த மாநாட்டில் தான் தி.மு.க தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பு நடந்து தி.மு.க தேர்தல் நடந்தது.
67 ஆண்டுகளுக்குப் பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இது வரலாற்றைப் படைக்கும் மாநாடாக இருக்கும்.
அ.தி.மு.கவில் ஒருங்கிணைந்த என்கிற பேச்சுக்கே இடமில்லை.எம்.ஜி.ஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் எனக் கேட்ட போது அ.தி.மு.கவின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார். அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் எனக் கூறுவதற்கான இந்த மாநாடு.
ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்துத் தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள், அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும், தொண்டர்களுக்கும் சம்மதமில்லை.
அ.தி.மு.க தனித் தன்மை வாய்ந்தது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் தான் பொதுக்குழுவில் யாருக்குப் பெரும்பான்மை எனப் பார்ப்பார்கள். ஆனால் கட்சியில் ஜனாதிபதியை தேர்தெடுக்கும் முறையைத் தான் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். அதன் மூலம் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்.
தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை.ஒருங்கிணைப்பாளருக்கு முரணாகச் செயல்பட்டால் அந்தப் பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது.அ.தி.மு.கவின் சட்ட விதிகளைப் புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள்.அவர்களுக்குப் புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ எனத் தோன்றுகிறது.
அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தது. அது எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமானது அல்ல, அந்தக் கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்களும் அ.தி.மு.கவின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. எங்கள் தலைவரும், அண்ணியாரும் எங்களுக்குக் கொடுத்த சீதனம் இது.
திருச்சியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்பு குறித்து தற்பொழுது உறுதியாக எதுவும் கூற முடியாது.ஒரு கட்சியிலிருந்து மற்றொருவர் வேறொரு கட்சிக்கு சென்றால் அது யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.கட்சி இயங்குவதற்குத் தொண்டர்கள் முக்கியம். அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம்.
அ.தி.மு.க.வில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? ஓபிஎஸ்க்கு இருக்கிறதா? என்பதை நாளை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல, அ.தி.மு.கவிற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்” எனக் கூறினர்.
இந்த மாநாட்டிற்காக மேடை அமைக்கும் பணி, நாற்காலிகள் போடும் பணி, மின் விளக்குகள் அமைக்கும் பணி பிளக்ஸ் பேனர் கட்டும் பணிகள் மிகவும் தீவிரமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையில் சென்னையில் உள்ள அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத் தோற்றத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை என்ற பெயர் அச்சிடப்பட்டு முகப்புத் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க கொடி மற்றும் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.