அதிமுகவின் கூட்டணி என்பது தமிழகத்தில் தொடர்கிறது
சீர்காழி சட்டநாதர் கோவிலில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் சீர்காழியிலேயே வைத்து பராமரிக்க வேண்டும்.இதனை திராவிட மாடல் அரசை நம்பி ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை என எச்.ராஜா தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டியபோது 22 ஐம்பொன் சிலைகள், 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இவை அனைத்தும் இரண்டடுக்கு போலீசார் பாதுகாப்புடன் கோவில் சன்னதியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா இன்று நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சிலைகள் மீட்கப்பட்ட நந்தவனப் பகுதியை பார்வையிட்ட அவர் சிலைகளின் தன்மை குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது, “ சீர்காழி நகர் முழுவதுமே சிலைகளை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்தேன். இது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் வளாகத்திற்கு உள்ளேயே சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் அந்த சிலைகளை இங்குள்ள கோவில் வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு வசதிகளை இங்கேயே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலை பாதுகாப்பகத்தில் வைக்கப்படும் சிலைகளே அவ்வப்பொழுது மாறிவிடுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்க திராவிட மாடல் அரசை நம்புவதற்கு இப்பகுதி மக்கள் தயாராக இல்லை என தெரிவித்தார்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல கோடி ரூபாய்கள் நிதி முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல கோடி ரூபாய் வரை களவாடப் பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.இதுபோல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் இங்கேயே வைத்து பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அதிமுகவின் கூட்டணி என்பது தமிழகத்தில் தொடர்கிறது.கடந்த ஆண்டுகளில் மற்ற மாநிலங்களை பொறுத்தவரை அவர்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல்தான் தற்போதைய தேர்தலிலும் அவர்கள் தனியாக வேட்பாளர்களை நியமித்துள்ளனர். இதில் எந்த பிரச்னையும் இல்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது எனவும் தெரிவித்தார்.