இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே தந்தையிடம் சொத்து கேட்டு மகன் 3 அடி குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அடைக்கம்பட்டியைச் சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் காஜாமைதீனுக்குச் சொந்தமாக ஆண்டிப்பட்டி வருஷநாடு மாநில நெடுஞ்சாலையில் 40 சென்ட் அளவிற்கு நிலம் உள்ளது.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தைக் காஜாமைதீன் தனக்குத் தராமல் தனது இளைய சகோதரர் முகமது சுனில் என்பவருக்கு மட்டும் தர முயற்சிப்பதாகவும், தனக்குரிய இடம் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறி மூத்த மகனான 41 வயது முகமது சுல்தான் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்காக மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அவரது தந்தையின் நிலத்தில் மூன்றடி குழியை வெட்டிவிட்டு அதில் இறங்கி நின்று கொண்டு தனது சொத்து தனக்கு வேண்டும் என்று கூறிக் கத்திக்கொண்டே கடும் வெயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்தத் தகவல் பரவியதையடுத்து, கண்டமனூர் போலீசார் விரைந்து வந்து குழிக்குள் இருந்தவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் காலையிலிருந்து உணவு உண்ணாமலும், கடும் வெயிலிலும் நின்று கொண்டிருந்து கத்திக்கொண்டே இருந்த முகமது சுல்தான் குழியில் இருந்து மேலே வர மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சாலையோர மரத்தடியில் படுக்கவைத்து முகத்தில் தண்ணீர் தெளித்தும், தண்ணீரை குடிக்க வைத்தும் 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையிடம் சொத்து கேட்டு 3 அடி குழிக்குள் இறக்கி மகன் நடத்திய நூதன போராட்டத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.