விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்
கொடைக்கானலில் அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவிகளுக்குக் கொடுக்கப்பட்ட சைக்கிள்கள் பழைய இரும்பு கடைக்குப் போடப்பட்ட அவலம் நடந்துள்ளது.
தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி செல்லும் ஆர்வத்தை அதிகரிக்கவும் பயண தூரத்தை சிரமமின்றிக் கடக்கவும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை கிராமங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட இருந்த சைக்கிள்கள் பழைய இரும்புக் கடையில் மொத்தமாக கிடப்பது தெரிய வந்துள்ளது
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய சைக்கிள்களைக் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்று பழைய இரும்பு கடைக்குப் போட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சைக்கிள்களில் தமிழக அரசு முத்திரை மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் இந்தப் பிரச்சனை குறித்துச் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது, ”விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.