டாக்டரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளார். மேலும் தப்பி ஓடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிபவர் உதயகுமார். இவர் கடந்த 14 ஆம் தேதி தனது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அவரை கட்டிப்போட்டு 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தடயங்கள் மற்றும் தகவலின்பேரில் பழனியைச் சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சரவணன் கொடுத்த தகவலின்பேரில் அவர் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து, மருத்துவர் உதயகுமார் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சரவணன் ஏற்கனவே கார், பைக்குகளை திருடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.
சரவணன் சிறையில் இருந்தபோது பழகிய திண்டுக்கல்லை சேர்ந்த கூட்டாளி ஒருவருக்கு தகவல் கொடுத்து அவருடன் வந்த சிலர் மருத்துவர் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சரவணனிடம் இருந்து 34 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம், கார் ஒன்று மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.