ஏரியில் இருந்த மீன்கள் மற்றும் பாம்புகள் திடீரென செத்து மிதப்பதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அழகன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அழகன் ஏரியில் இந்த முறைதான் தண்ணீர் அதிகமாக உள்ளது. இதனால் ஊத்தங்கரை, அப்பிநாயக்கன்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அழகன் ஏரியில் இருந்த மீன்கள் மற்றும் பாம்புகள் திடீரென செத்து மிதந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். அப்போது ஏரியில் இருந்த மீன்கள் மற்றும் பாம்புகள் அனைத்தும் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். மேலும் கிராம மக்கள் ஊத்தங்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே காவல் துறையினர் நேரில் வந்து ஏரியை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்து வருபவர்கள் யாரும் தங்களது கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் ஏரியில் காவல் காத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரித்தபோது ‘இந்த சம்பவம் தொடர்பாக தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்த ஆய்வு முடிகள் வந்த பின்னர் மீன்கள் மற்றும் பாம்புகளின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்’ என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.